தாஜிகிஸ்தான் நாட்டு நபர் பயண கடப்பிதழ் தாமதம் காரணமாக தூதரக அதிகாரியை மிரட்டியதாக கைது
- kumara885
- Oct 13, 2025
- 1 min read

அம்பாங் – புதிய பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் செயல்முறை தாமதமானதற்கு அதிருப்தியடைந்த தாஜிகிஸ்தான் நாட்டு நபர் ஒருவர், இங்குள்ள தனது நாட்டின் தூதரக அதிகாரியை மிரட்டியதும் தொந்தரவு செய்ததும் காரணமாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
27 வயதுமிக்க அந்நபர் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தனது புதிய பாஸ்போர்ட் தயாராகாததால் ஆத்திரமடைந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்.
“அந்த சந்தேக நபர் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக தாஜிகிஸ்தான் தூதரகத்திற்கு வந்தபோது, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற மறுத்ததுடன், அங்குள்ள அதிகாரிகளிடம் கத்தி, அனுமதி இல்லாமல் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றார்.
“மேலும், அவர் இரவு நேரங்களில் தூதரகப் பகுதியில் சுற்றித்திரிந்ததோடு, அங்கு பணியில் இருந்த அதிகாரிகளுக்கு எதிராக அநாகரிகமான சொற்களைப் பயன்படுத்தி தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததும் கண்டறியப்பட்டது,” என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் மொஹ்த் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, சந்தேக நபர் தனது கோரிக்கை நிறைவேறாவிட்டால் தூதரகத்தின் முன் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விட்டு குறுந்தகவல்களை அனுப்பியதோடு, தாஜிகிஸ்தான் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோவையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்ததாக நம்பப்படுகிறது.
புலனாய்வு மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவு அதிகாரிகள் அக்டோபர் 8ஆம் தேதி காலை 11.20 மணியளவில் அம்பாங் பகுதியில் அந்த நபரை கைது செய்தனர்.
“தொடர் சோதனையில் சந்தேக நபரிடமிருந்து ஒரு கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணைக்காக போலீஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
“போலீஸ் சோதனையில் சந்தேக நபர் மீது இதற்கு முன் எந்த குற்றச் செயல் இல்லாததும், சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொள்ளாததும் உறுதிசெய்யப்பட்டது,” என அவர் உறுதிப்படுத்தினார்.
தற்போது அந்த நபர் மேல் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.





Comments