இன்றிரவு லாவொசை பந்தாடினால் உலகத் தரவரிசையில் ஹரிமவ் மலாயா உயரும்
- kumara885
- Oct 15, 2025
- 1 min read

கோலாலம்பூர், அக்டோபர் 14- மலேசிய மக்களின் ஒட்டுமொத்த பார்வையும் இன்று ஹரிமாவ் மலாயா மற்றும் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தின் மீதே இருக்கும்.
தலைமை பயிற்றுனர் பீட்டர் கிலாமொவ்ஸ்கியின் தேசிய காற்பந்துக் குழு இன்றிரவு லாவொஸ் அணியைச் சந்திக்கவிருக்கிறது.
இதனை மிக முக்கியமான ஆட்டமாக ஹரிமாவ் மலாயாவின் பரம எதிரியான வியட்னாம் அணி உட்பட ஒட்டுமொத்த ஆசிய நாடுகளும் கவனிக்கும்.
மூன்று ஆட்டங்களின் வழி தேசிய அணி தற்போது 9 புள்ளிகளுடன் முதல் நிலையில் இருக்கும் தருவாயில் இரண்டாம் இடத்தில் வியட்னாம் குழு இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் லாவொசை ஹரிமாவ் மலாயா அணி 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் பந்தாடியது.
இதே வெற்றியை இன்றிரவு மீண்டும் பதிவு செய்ய ஹரிமாவ் மலாயா கோரப் பசியில் காத்திருக்கிறது.
ஒருவேளை மலேசிய அணி மீண்டும் லாவொசை தோற்கடித்தால் கூடுதலாக +6.53 புள்ளிகள் பெற்று உலகக் காற்பந்து சம்மேளனத்தின் உண்மை நேர தரவரிசைபடி மொத்தமாக 1161.52 புள்ளிகளை அடையும்.
மேலும் மகிழ்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் இன்றிரவு லாவொசுக்கு எதிரான வெற்றி தேசிய அணியை உலகத் தர வரிசையில் தற்போது 123 இடத்திலிருந்து 118ஆவது இடத்தில் வைக்கும் என்பது உறுதி.
தற்போது தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த அணியாக தாய்லாந்து 98ஆவது இடத்தில் உள்ள வேளையில் வியட்னாம் 114ஆம் இடத்தை அலங்கரிக்கின்றது.
இன்றிரவு வெற்றியின் மூலம் மலேசியா முன்றாவது சிறந்த அணியாகத் திகழும்.





Comments